Tubers form of the Lord
முதலாம் ஏப்ரல் 2020 - அடி தேடி போனேனடி
(வெள்ளிக் கிழங்கு தோண்டி எடுத்த போது உதித்த அடிகள்)
அடி தேடி போனேனடி
அண்ணன் அடி தேடி போனேனடி (2)
மலையினடி இருப்பதாக
சொன்னானடி
தேடி தேடி களைத்த
ஆதி திருவரங்கன்
அயர்ந்ததாக சொன்னானடி
( ஆதி திருவரங்கம் என்று திருவரங்க பெருமான் படுத்துக் கொண்டே அருளும் புண்ணிய தலம் திருவண்ணாமலைக்கு 30 கி.மீஅருகில் உள்ளது. இத்திருதலத்தில் கைங்க்ர்யம் செய்பவர்கள் இந்த கோவில் திருச்சி அருகில் உள்ள திருவரங்கத்தை காட்டிலும் பழமையானது என்று கூறுகின்றனர். திருவண்ணாமலையில் சிவனின் ஒளி உருவின் அடியையும் முடியையும் விஷ்ணுவும் பிரம்மாவும் காண முடியாமல் தவித்தனர் என்று வரலாறு கூறுகிறது. அண்ணாமலையை தேடி களைத்ததால் பெருமாள் இங்கு படுத்து ஒய்வெடுத்தாரோ என்பது எமது கேள்வி )
சக்கரத்தாழ்வாரும் போற்றும்
மாதவனும் காணாதடி
நம்மாழ்வார் அடிப்பொடி
மா தவம் செய்யாமல்
கண்டேனடி
( இங்கு குறிப்பிடபடும் நம்மாழ்வார் _ இயற்கை வேளாண் விஞ்ஞானி )
அருணகிரிக்கு அடி
எடுத்து கொடுத்த
ஆனை மணாளனும் (தேவ)
வள்ளிக் கிழங்காக
அடி காட்டிக் கொடுத்தானடி
( அருணகிரி நாதருக்கு திருவண்ணாமலையில் வைத்து தான் முருக பெருமான் “முத்தை திரு” பாடலின் அடி எடுத்துக் கொடுத்து திருப்புகழ் பாடவைத்தார். அது போல் எனக்கு வெள்ளிக் கிழங்கு வயலில் தோண்டி எடுத்த போது இந்த பாடல் வந்ததால் வள்ளிக் கிழங்கு தேடிய போது முருகன் எடுத்து கொடுத்த வரிகள் என்று விவரிக்கின்றேன் )
பத்தவதாரம் கண்டவனும்
காணாத அடி
வெண் தாடிக் காரன்
காண்பித்தானடி
களக்காட்டில் சத்திய
வாக்கு எடுத்தானடி
உண்மையை ஊருக்கு
உரக்க உறைப்பேன்
உரைக்க உறைப்பேன்
என்றானடி
(நம்மாழ்வார் அய்யாவிற்கு திருநெல்வேலி மாவட்ட களக்காடு வட்டாரத்தில் தான் இயற்கை வேளாண்மை மீட்டெடுக்கும் முயற்சியை தொடங்கியதாக அய்யா பற்றிய நூல்கள் கூறுகின்றன, தமிழ் இந்து நாளிதழில் வந்த அய்யாவின் வாழ்னாள் குறிப்பிலும் இந்த தகவ்ல் பகிரப்பட்டுள்ளது. அந்த இணையதளம் இங்கே https://www.hindutamil.in/news/blogs/203690-10-1.html
பிரபஞ்சத்தின் ஆச்சரியத்தின் ஒன்றாக அந்த களக்காடு கிராமம் தான் எனது பூர்வீகமும். களக்காட்டில் அருளும் சிவ பெருமானின் பெயர் சத்தியவாகீஸ்வரர். எனது தந்தையின் பெயரும் இந்த தெய்வத்தின் பெயரால் வந்தது தான் )
உழவனடி தொழவேண்டுமடி
உலகம் உய்விக்க
மூவடி எடுத்தானடி
மாடுகள் மேய்த்தானடி
சாணத்தை உரமாக்க
புழுவாகவும் அவதாரம்
எடுத்தானடி
எந்த ஏறும் தொடா
ஆழம் தொடும்
புழுவே உழவனடி
உழவனடி தொழவேண்டுமடி
மண்புழுவினடி தொழவேண்டுமடி
அண்ணாமலை அடிக்காண
உழவனானேனடி
ஆழம் போவேனடி
ஆழ்ந்தும் போவேனடி
( நம்மாழ்வார் மிகவும் போற்றும் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஜப்பானிய கிழவன் என்று அன்போடு அழைக்கப்படும் திரு மசனோபு புகுவோகா “ உழவில்லா வேளாண்மை “ உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் – அவர் மன்புழுவே உண்மையான உழவன் என்கிறார். அந்த கருத்தினை நம்மாழ்வார் அய்யா பலக் கூட்டங்களில் உரக்க கூறியிருக்கிறார். இன்னொரு ஆச்சரியம் “கிருஷி” னா என்ற எனது பெயரின் மருவு – சமஸ்கிருதத்தில் “ விவசாயி “ என்று பொருள். அதனால் மண்புழு புல்லாங்குழல் கிருஷ்ண பரமாத்மா போல் மயில் பீலியுடன் வாசிப்பதாக நிழற் படம் தயாரித்து இந்த பதிவில் வெளியிட்டுள்ளேன்)


Comments
Post a Comment